பாகிஸ்தான்: குர்ஆன் அவமதிப்பு குற்றச்சாட்டில் சிக்கிய கிறிஸ்தவ இளைஞர்கள் – தேவாலயங்கள் மீது தாக்குதல்
குர்ஆன் அவமதிக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் ஃபைசலாபாத் பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.
ஃபைசலாபாத்தின் ஜரன்வாலா தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் ஒரு கிறிஸ்தவ குடியிருப்பைப் போாராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். தேவாலயம் ஒன்றுக்கும் தீ வைத்த அவர்கள், சில அரசு கட்டடங்களையும் அடித்து நொறுக்கினர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, எஸ்சா நாக்ரி என்ற பகுதியில் கிறிஸ்தவ இளைஞர்கள் சிலரால் குர்ஆன் அவமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவத் தொடங்கியது. இதையடுத்து காலை முதல் அங்கு போராட்டங்கள் வெடித்தன.
ஜரன்வாலா நகர காவல் உதவி ஆணையர் ஷெளகத் மசிஹ் பிபிசியிடம் தொலைபேசியில் கூறும்போது, “இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை, எஸ்சா நாக்ரியில் போராட்டத்தில் இறங்கிய ஒரு கும்பல் தீவைப்பு சம்பவத்திலும் ஈடுபட்டதாக உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
